Tuesday, February 1, 2011

முதல்வரின் நம்பி‌க்கை வீண்போகாது: ராமதாஸ்

சேலம்: தேர்தல் கூட்டணி குறித்து முதல்வர் நம்பிக்கை வீண்போகாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,கூட்டணியில் பா.ம.க., இடம்பெற வாய்ப்பில்லாத நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்திருந்தாலும், அங்கும் கூடுதல் சீட் கேட்டு நெருக்குதல் கொடுத்தால் அ.தி.மு.க.,வும் கை விடும் நிலையில் உள்ளார் பா.ம.க.,. நிறுவனர் ராமதாஸ். 

இந்நிலையில் இடப்பாடி, ஒமலூர் பகுதியில் நடைபெறும் பயிற்சி முகாமில் ராமதாஸ் பங்கேற்றார்.அதன் பின்னர் நிருபர்கள் ராமதாஸிடம் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்த அவர். 

பின்னர் அளித்த பேட்டியில் திமு.க - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்கவில்லை என்றுதான் கூறினேன். தேர்தல் கூட்டணி பற்றிய முதலமைச்சரின் நம்பிக்கை வீண்போகாது என்றார்.

கவர்ச்சி வேஷம் கொடுங்க! – அஞ்சலி

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் ‘மீட்டர்’!
 
சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!

இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.


இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த ‘ரேட்’ கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.
“இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.

அடுத்து, கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்…”, என்றார்.

உலககோப்பை கிரிக்கெட்: நாளை டிக்கெட் விற்பனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ம் தேதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 4 போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 

காலை 9.30 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் டிக்கெட் விற்பனை நடைபெறும். நியூசிலாந்து-கென்யா போட்டிக்கு ரூ.250 முதல் ரூ.10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளுக்கு ரூ. 500 முதல் ரூ.20 ஆயிரம் வரை டிக்கெட் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுகளுக்கு மேல் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்காள்-தங்கையை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

 
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோழரை சேர்ந்தவர் குலாம்
நபிதர். இவரது மகள்கள் அரியா (வயது 18), அக்தர் (16).இவர்கள் வீட்டுக்குள் இரவு 10 மணியளவில் 3 தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் அரியா, அக்தர் இருவரையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து சென்றனர்.
 
அங்கிருந்த தர்கா அருகே அழைத்து சென்று துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக் கொன்றனர். இருவரின் பிணத்தையும் அங்கேயே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பி விட்டனர். 
 
அக்காள்-தங்கையை அவர்கள் கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. போலீசுக்கு தகவல் சொல்பவர்களாக இருக்கலாம் என கருதி கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
3 தீவிரவாதிகளில் 2 பேர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். உள்ளூர் தீவிரவாதிகள் 2 பேரும் வாசிம்கான், முசாபர் என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் தலைக்கு போலீசார் ஏற்கனவே பரிசு அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரவில் முடிவை மாற்றிய கருணாநிதி: காங்கிரசை மிரட்ட போட்ட திட்டம், பணால்

"தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், "பணால்' ஆனது.

டில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, "தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், "பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, "நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.

இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் பா.ம.க.,வை சேர்ப்பதில் அவசரப்பட்டு விட்டோமோ என்ற குழப்பமும் தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

பிரதமருக்கு தெரியாது?பிரதமரைச் சந்தித்த பின், தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, மீனவர் பிரச்னை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு முதல்வர் பதில் அளித்தபோது, "மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமரிடம் பேசினேன். மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு அவ்வளவாக தெரியாது. அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அவரும் உரிய முறையில் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.

நடி‌கையை ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த ஜோதிடர்

கோவையை சேர்ந்த ஜோதிடர் ஒருவர், ஒரு நடிகையை ஆபாசமாக படம் எடுத்ததுடன், பணத்தையும் வாங்கி மோசடி செய்துள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட நடிகை ‌போலீசில் புகார் செய்துள்ளார். காதல் வலி, ஆப்பக்காரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் நடிகை லலிதா. இவர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

நான் என்னுடைய காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்கு வசிய ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனிடம் யோசனை கேட்டேன். அவர் நேரில் வரும்படி கூறினார். நான் அவரை நம்பி கோவை வந்தேன். பலமுறை அவரை சந்தித்தேன். அவர் சந்திக்கும் போதெல்லாம் ஆபாசமாக பாலுணர்வை தூண்டும் விதமாக என்னிடம் பேசினார். என்னை மயக்கி அவர் தரும் மெல்லிய துணியினை கவர்ச்சி உடைகளை அணிய சொன்னார். இப்படி அணிந்து சென்று பள்ளியறையில் தியானம் செய்தால் காதலன் உன்னையே சுற்றி வருவார் என்றார். நான் தரும் வசிய மையை காதலனின் தொப்புளில் தடவினால் உன் காலடியில் விழுந்து கிடப்பான் என்ற ஆசை வார்த்தை கூறினார்.   நான் அவர் கூறியபடி, கவர்ச்சி உடை அணிந்து நடந்து கொண்டேன். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஆபாச படம் எடுத்ததோடு மட்டுமல்லாமல், ரூ. 5 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் நடிகை லலிதா கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நடிகையிடம் விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட ஜோதிடர் பற்றியும், அவர் இதற்கு முன்பு யாரிடமாவது இவ்வாறு நடந்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

Monday, January 31, 2011

மாதவனுக்கு கமல்ஹாசன் கண்டிப்பு!

மன்மதன் அம்பு படம் பற்றி விமர்சித்த நடிகர் மாதவனுக்கு, நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் மாத‌வன், மன்மதன் அம்பு படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை; பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் சாதிக்காது என்பது தெரியும். இது ஒரு சுமாரான படம். ஓரளவு வசூல் இருந்தது என்பதே உண்மை என்று கூறியிருந்தார். இந்த கருத்தை வேறு யாராவது கூறியிருந்தால் இந்த அளவு கொதித்திருக்காது கோடம்பாக்கம். படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த மாதவனே சொல்லியதால் பலரும் மாதவனை போனில் கூப்பிட்டு தங்களது வருத்தத்தையும், கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

மன்மதன் அம்பு படத்திற்கு சம்பந்தப்பட்ட அத்தனை ‌பேருமே மாதவனை திட்டித் தீர்த்தது ஒருபுறமென்றால் திரையுலக முக்கிய புள்ளிகளும் மாதவனை காய்ச்சி எடுத்து விட்டார்களாம். இத்தனை கண்டனங்களை சந்தித்த மாதவனுக்கு பேரதிர்ச்சியாக ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் மன்மதன் அம்பு நாயகன் கமல்ஹாசன். படத்தை சுமாரான படம் என்று கூறியிருப்பதை கண்டித்த கமலிடம், இனிமே இப்படியெல்லாம் வாயை விட மாட்டேன் என்று மாதவன் தெரிவித்திருக்கிறாராம். மாதவனின் மன்னிப்புக்கு பிறகுதான் கூலானாராம் உலக நாயகன்.

Sunday, January 23, 2011

உள்ளாடை போடமறந்த நடிகை


உள்ளாடை அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக நடிகை நீது சந்திரா எதிராக மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.  மாதவனுடன் யாவரும் நலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நீது சந்திரா. மும்பையை சேர்ந்த இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்த நீது சந்திராதான் பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

வழக்கமாக பொது விழாக்களுக்கு ஆபாசமாக உடையணிந்து வரும் நடிகைகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பும் மாதர் சங்கங்கள், இப்போது நீது விஷயத்தில் கொஞ்சம் எழுப்பும் சர்ச்சை கொஞ்சம் அதிகப்படியானதுதான். அன்றைய தினம் நிகழ்ச்சிக்கு வந்த நீது, வழக்கம்போலவே மூழங்கால் தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக உடையணிந்து வந்ததுடன், உள்ளாடை எதுவும் அணியாமல் இருந்தாராம்.

Saturday, January 22, 2011

அமிதாப்புடன் நடிக்கிறேனா?ஆடுகளம் டாப்ஸி

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ‘ஆடுகளம்‘ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளவர் டாப்ஸி. அவர் கூறியதாவது: ‘ஆடுகளம்’ படத்தில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இதில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடித்துள்ளேன். யதார்த்தமான கதைகளில் நடிக்கும்போதுதான் நம் திறமையை நிரூபிக்க முடியும். 

அப்படியொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பூரி ஜெகன்னாத் இயக்கும் ‘புட்டா’ என்ற படத்தில் அமிதாப்புடன் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அந்தப் படத்துக்கு என்னிடம் கால்ஷீட் கேட்டது உண்மைதான். அவர்கள் கேட்ட தேதி என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். 

அமிதாப்புடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். தமிழில், ‘வந்தான் வென்றான்’ படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறேன். இதில் எனது கேரக்டர் மாடர்னானது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.

Thursday, January 20, 2011

ராணா... ரஜினியின் அடுத்த படம்

ரஜினி படத்தின் தலைப்பு ஹரா அல்ல... ராணா என ரஜினி தரப்பில் உறுதிப்படுத்திவிட்டனர்.

ராணா என்றால் மன்னன் என்று பொருள். ராஜபுத்திர மன்னர்கள், மராட்டிய, கூர்ஜர பகுதியின் ராஜ வம்சத்தினர் இந்தப் பெயரை பயன்படுத்துவார்கள்.

சமஸ்கிருதப் பெயராக இருந்தாலும், ராணா ஒரு பெயர்ச் சொல் என்பதால், தமிழில் வரிவிலக்கு கிடைக்கும் என்று ரஜினியிடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த ஆண்டு அவர் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாவிட்டாலும், ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படம் என்பதால் ராணாவை முடித்துத் தருகிறார்.

எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேல் ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படம் சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வந்தது. இதை ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்கியிருந்தார்.

ஆனால் தற்போது இதை அப்படியே மாற்றி, முழுமையான ரஜினி படமாக உருவாகிறது. ராணா படத்தில் குறிப்பிட்ட பகுதி மட்டும் அனிமேஷன் காட்சிகளாக இருக்கும். அனிமேஷன் பகுதியை செளந்தர்யா இயக்க மற்றவற்றை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவார்.

Wednesday, January 19, 2011

விஜய், அஜீத் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்



அ.தி.மு.க. கூட்டம் திருச்சி ஜங்சன் பகுதி கழக அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆழ்வார்தோப்பில் நடந்தது. 


பகுதி செயலாளர் நாகநாதர்பாண்டி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, வட்ட செயலாளர் காதர்முகமது வரவேற்றனர். மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், பரஞ்சோதி எம்.எல்.ஏ., பேசினர்.

கூட்டத்தில் நடிகர் ஆனந்தராஜ், சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. எழுச்சி பெற்று வருகிறது. அ.தி.மு.க.வினர் நடத்தும் கூட்டமே மாநாடுபோல இருக்கிறது. இதைக்கண்டு தி.மு.க. பயப்படுகிறது. கோவை அ.தி.மு.க. கூட்டத்தை பார்த்த தி.மு.க. வாரம் 5 இலவச முட்டை என அறிவித்தது.

இதனால் முட்டை விலை உயர்ந்து இப்போது ரூ.4 ஆக உயர்ந்துவிட்டது. திருச்சி கூட்டத்தை பார்த்து பயந்த தி.மு.க. இலவச கான்கிரீட் வீடு என அறிவித்தது. இதனால் ரூ.140-க்கு விற்ற சிமெண்டு மூட்டை இப்போது விலை ரூ.300 ஆகிவிட்டது.

அ.தி.மு.க. கூட்டத்துக்கே மாநாடு போல திரளும் கூட்டத்தை பார்த்து தி.மு.க. பயந்து உள்ளது. மேலும் நடிகர்கள் இப்போது திரையுலகம் ஆதரவும் பெருகி வருகிறது. நடிகர்கள் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், அஜித், விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வருகிறார்கள். பா.ம.க. வர உள்ளது. மேலும் நடிகர்கள் வருவார்கள். எம்.ஜி.ஆர். புத்திசாலி. ஒருமுறை மதுரையில் இரவு பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு காரில் சென்னைக்கு திரும்பினார்.

டிரைவருக்கு அருகில் இருந்த அவரது உதவியாளர் தூங்கி, தூங்கி டிரைவர் மேலே விழுந்து கொண்டே இருந்தார். உடனே எம்.ஜி.ஆர். உதவியாளர் கையில் வேர்க்கடலையை கொடுத்து கேட்கும்போது தரவேண்டும் என கூறிவிட்டார்.

விழுப்புரம் வந்தபோது உதவியாளர் கடலை தரவா என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார். மீண்டும் திண்டிவனம் வந்தபோது உதவியாளர் கடலை வேண்டுமா, என்றார் எம்.ஜி.ஆர். வேண்டாம் என்றார்.

இறுதியில் ராமாவரம் தோட்டத்துக்கு வந்தபோதும் உதவியாளர் கேட்டபோது எம்.ஜி.ஆர். வேண்டாம் என கூறிவிட்டார்.

உடனே உதவியாளர் பிறகு ஏன் இரவில் கடலையை வாங்கி என்னிடம் கொடுத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர். நீ...தூங்கி... தூங்கி டிரைவர் மேலே விழுந்ததால் டிரைவரால் ஓட்ட முடியவில்லை. கடலையை வாங்கி நான் உன்னிடம் கொடுத்ததால் நான் திடீர் என கேட்பேன் என்பதால் தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பாய் என்பதால் கடலை பொட்டலத்தை உன்னிடத்தில் கொடுத்து வைத்தேன் என்றார்.

அதனால்தான்... அவருக்கு அ.தி.மு.க.வில் பலர் இருந்தும் புத்திசாலியான ஜெயலலிதாவிடம் அ.தி.மு.க.வை ஒப்படைத்தார். இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் தமிழகத்தில் மீண்டும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.

Friday, January 14, 2011

ஆடுகளம் - திரைவிமர்சனம்

பொல்லாதவனுக்கு பிறகு தனுஷ்-வெற்றிமாறன்-G.V.பிரகாஷ் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ஆடுகளம். பொல்லாதவனுக்கு பிறகான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சிறப்பாக வந்திருக்கிறது ஆடுகளம். 



சேவல் சண்டையில் பேட்டைக்காரன்தான் மதுரையிலேயே 40 வருடமாக கில்லாடி. (பேட்டைகாரனாக நடித்திருப்பவர் ஒரு கவிஞர், பெயர்தான் ஞாபகத்தில் வரமாட்டேனென்கிறது)அவரின் மூன்று முக்கிய ஆட்கள் ஒரு பெரியவர், கிஷோர், தனுஷ். இவர்களின் முக்கிய போட்டிக்காரன் உள்ளூர் போலிஸ் இன்ஸ்பெக்டர். எப்படியாவது பேட்டைக்காரனின் சேவலை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டுமென்பது அவரின் தீராத வெறி. திரைப்படத்தின் முதல் பாதி இவர்களின் சண்டைகளிலேயே விறுவிறுவென போகிறது. இதற்கிடையில் தனுஷ், ஆங்கிலோ-இந்தியன் பெண்ணான தப்சி பானு மீது காதல் கொள்கிறார். 

இதற்கிடையில் பேட்டைக்காரனின் உற்ற நண்பனை எதிர்சாரர் போட்டுத்தள்ள, ஒரு பெரிய சபதத்தின் பின், ஒரு பெரிய சேவல் சண்டை போட்டியில் இரண்டு குழுவும் மோதிக்கொள்கிறது. விறுவிறுப்பான நரம்புகள் அதிரும் சேவல் சண்டை. தனுஷின் சேவல் முக்கிய கட்டத்தில் எதிர்சாரரின் சேவலை மூன்று முறை தோற்கடித்து , மூன்று லட்சம் பணமும் வெற்றி பெறுகிறார். தன்பேச்சை கேட்காத தனுஷ் மீது பேட்டைக்காரனின் வன்மம் படரத் துவங்க இந்த சண்டைச் சேவல்களின் வாழ்க்கை என்னவானது என்பது மீதிப்பாதி.
.
பொல்லாதவனுக்கு பின்பு வெற்றிமாறனின் இரண்டாவது படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எனக்கிருந்தது. பொல்லாதவனை விடவும் சிறப்பாக எடுத்திருக்கிறார். மதுரையின் பேச்சு வழக்கும், சேவல் சண்டைகளின் உக்கிரமும், மனிதர்களின் வன்மத்தையும் மிகசிறப்பாக படத்தில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக கதாப்பாத்திர தேர்வு மிகமிக சிறப்பு. பேட்டைக்காரன், தனுஷ், கிஷோர், தனுஷின் அம்மா, தனுஷின் நண்பர், போலிஸ் இன்ஸ்பெக்டர் என எல்லாருமே அருமை.

தனுஷின் காதல் கதை தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும், கடைசியில் தனுஷுக்கு வேறு யார் இருந்திருப்பார்கள் என்பதற்காக அந்த நாயகியும் அவசியமாகிறது. மதுரை வட்டார மொழி வழக்கில் வசனங்களும் அருமை. G.V.பிரகாஷின் பின்னணியிசையும் அருமை. மேலும் எந்த பாடலையும் பாடல் காட்சியாய் படமாக்காமல், பின்னணியில் மட்டும் ஒலிக்கவைத்திருப்பது சிறப்பு.

அதேநேரம் "ஒத்த சொல்லால" பாடலை பாடல் காட்சியாய் திரையில் எதிர்பார்த்திருந்தேன் என்பதும் உண்மை. அதேபோல் வரும் இரண்டு சண்டைக்காட்சியும் இயல்பான சண்டையாகவே இருந்தது. சினிமா சண்டைகாட்சிகள் அல்ல.
.
பல காட்சிகள் சிறப்பு. போலிஸ் ஸ்டேஷனில் பேட்டைக்காரனுக்கு நடந்த அவமானம் முதல் கடைசிக்காட்சியில் தனுஷிடம் எந்த விளக்கமும் கொடுக்காமல் முடித்துக்கொள்வது மாதிரியான காட்சிகள் மிக சிறப்பு. அவமானங்களை பதிவு செய்யாமல் விட்டிருப்பது சிறப்பு. 

சேவல்களை துன்புறுத்தக் கூடாதென்பதற்க்காக சேவல் சண்டைகளில் நிறையகாட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டுமூன்று படங்களாக வெறுப்பேற்றிய தனுஷ்க்கு அல்வா மாதிரியான கதாப்பாத்திரம், பட்டையை கிளப்பியிருக்கிறார். தனுஷ்க்கு வெற்றிப்படமாக மட்டுமல்லாமல் பெயர் வாங்கித்தரும் படமாகவும் வந்திருக்கிறது.

நிச்சயம் இந்த புதுவருடத்தின் முதல் சிறப்பான பங்களிப்பாக இந்த ஆடுகளம் வந்திருக்கிறது. தரமான தமிழ்த் திரைப்படம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறகூட அனுப்பலாம். வெற்றிமாறனுக்கும் தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வெற்றிமாறன் தமிழ்சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்.

படத்தில் பணியாற்றிய அத்துணை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வருடத்துவக்கத்திலேயே சன் பிக்ச்ஸ்ர்சுக்கு வெற்றிப்படம்.

வாழ்த்துக்கள்

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல்,  நல்வாழ்த்துக்கள்.