பொல்லாதவனுக்கு பிறகு தனுஷ்-வெற்றிமாறன்-G.V.பிரகாஷ் வெற்றிக்கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் ஆடுகளம். பொல்லாதவனுக்கு பிறகான எதிர்பார்ப்பை வெற்றிமாறன் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். சிறப்பாக வந்திருக்கிறது ஆடுகளம்.
சேவல் சண்டையில் பேட்டைக்காரன்தான் மதுரையிலேயே 40 வருடமாக கில்லாடி. (பேட்டைகாரனாக நடித்திருப்பவர் ஒரு கவிஞர், பெயர்தான் ஞாபகத்தில் வரமாட்டேனென்கிறது)அவரின் மூன்று முக்கிய ஆட்கள் ஒரு பெரியவர், கிஷோர், தனுஷ். இவர்களின் முக்கிய போட்டிக்காரன் உள்ளூர் போலிஸ் இன்ஸ்பெக்டர். எப்படியாவது பேட்டைக்காரனின் சேவலை ஒரு முறையாவது வென்றுவிட வேண்டுமென்பது அவரின் தீராத வெறி. திரைப்படத்தின் முதல் பாதி இவர்களின் சண்டைகளிலேயே விறுவிறுவென போகிறது. இதற்கிடையில் தனுஷ், ஆங்கிலோ-இந்தியன் பெண்ணான தப்சி பானு மீது காதல் கொள்கிறார்.
இதற்கிடையில் பேட்டைக்காரனின் உற்ற நண்பனை எதிர்சாரர் போட்டுத்தள்ள, ஒரு பெரிய சபதத்தின் பின், ஒரு பெரிய சேவல் சண்டை போட்டியில் இரண்டு குழுவும் மோதிக்கொள்கிறது. விறுவிறுப்பான நரம்புகள் அதிரும் சேவல் சண்டை. தனுஷின் சேவல் முக்கிய கட்டத்தில் எதிர்சாரரின் சேவலை மூன்று முறை தோற்கடித்து , மூன்று லட்சம் பணமும் வெற்றி பெறுகிறார். தன்பேச்சை கேட்காத தனுஷ் மீது பேட்டைக்காரனின் வன்மம் படரத் துவங்க இந்த சண்டைச் சேவல்களின் வாழ்க்கை என்னவானது என்பது மீதிப்பாதி.
.
பொல்லாதவனுக்கு பின்பு வெற்றிமாறனின் இரண்டாவது படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எனக்கிருந்தது. பொல்லாதவனை விடவும் சிறப்பாக எடுத்திருக்கிறார். மதுரையின் பேச்சு வழக்கும், சேவல் சண்டைகளின் உக்கிரமும், மனிதர்களின் வன்மத்தையும் மிகசிறப்பாக படத்தில் கொண்டுவந்திருக்கிறார். குறிப்பாக கதாப்பாத்திர தேர்வு மிகமிக சிறப்பு. பேட்டைக்காரன், தனுஷ், கிஷோர், தனுஷின் அம்மா, தனுஷின் நண்பர், போலிஸ் இன்ஸ்பெக்டர் என எல்லாருமே அருமை.
தனுஷின் காதல் கதை தேவையில்லாதது என்று சொல்ல நினைத்தாலும், கடைசியில் தனுஷுக்கு வேறு யார் இருந்திருப்பார்கள் என்பதற்காக அந்த நாயகியும் அவசியமாகிறது. மதுரை வட்டார மொழி வழக்கில் வசனங்களும் அருமை. G.V.பிரகாஷின் பின்னணியிசையும் அருமை. மேலும் எந்த பாடலையும் பாடல் காட்சியாய் படமாக்காமல், பின்னணியில் மட்டும் ஒலிக்கவைத்திருப்பது சிறப்பு.
அதேநேரம் "ஒத்த சொல்லால" பாடலை பாடல் காட்சியாய் திரையில் எதிர்பார்த்திருந்தேன் என்பதும் உண்மை. அதேபோல் வரும் இரண்டு சண்டைக்காட்சியும் இயல்பான சண்டையாகவே இருந்தது. சினிமா சண்டைகாட்சிகள் அல்ல.
.
பல காட்சிகள் சிறப்பு. போலிஸ் ஸ்டேஷனில் பேட்டைக்காரனுக்கு நடந்த அவமானம் முதல் கடைசிக்காட்சியில் தனுஷிடம் எந்த விளக்கமும் கொடுக்காமல் முடித்துக்கொள்வது மாதிரியான காட்சிகள் மிக சிறப்பு. அவமானங்களை பதிவு செய்யாமல் விட்டிருப்பது சிறப்பு.
சேவல்களை துன்புறுத்தக் கூடாதென்பதற்க்காக சேவல் சண்டைகளில் நிறையகாட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டுமூன்று படங்களாக வெறுப்பேற்றிய தனுஷ்க்கு அல்வா மாதிரியான கதாப்பாத்திரம், பட்டையை கிளப்பியிருக்கிறார். தனுஷ்க்கு வெற்றிப்படமாக மட்டுமல்லாமல் பெயர் வாங்கித்தரும் படமாகவும் வந்திருக்கிறது.
நிச்சயம் இந்த புதுவருடத்தின் முதல் சிறப்பான பங்களிப்பாக இந்த ஆடுகளம் வந்திருக்கிறது. தரமான தமிழ்த் திரைப்படம். உலகத் திரைப்பட விழாக்களில் பங்குபெறகூட அனுப்பலாம். வெற்றிமாறனுக்கும் தனுஷ்க்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வெற்றிமாறன் தமிழ்சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம்.
படத்தில் பணியாற்றிய அத்துணை கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வருடத்துவக்கத்திலேயே சன் பிக்ச்ஸ்ர்சுக்கு வெற்றிப்படம்.

1 comment:
உங்கள் விமர்சனம் படத்தைப் பற்றிய ஆவலை கூட்டுகிறது...
இன்றே பார்த்துவிட வேண்டியதுதான்...
Post a Comment